டீசல் இன்மையால் காரைநகர் குடிநீர் அபிவிருத்திச் சபையினர் இன்றிலிருந்து டீசல் கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் வலந்தையில் உள்ள வீதி வளைவிற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக காரைநகர் பகுதி முழுவதும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபடுகின்றோம். இந்த நிலையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின்போது அரச அதிபர் மற்றும் காரைநகர் பிரதேச செயலரின் பரிந்துரை மூலம் காரைநகர் இ.போ.ச டிப்போவால் எமக்கு சீரான எரிபொருள் விநியோகம் நடைபெற்றது.
ஆனால் இனிமேல் எமக்கு எரிபொருளை வழங்க முடியாது என டிப்போ அறிவித்துள்ளது. ஆகையால் நாங்கள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். சுத்தமான குடிநீர் என்பது காரைநகர் பகுதியில் கிடைக்காது. ஆகவே நாங்கள் வெளியில் இருந்தே குடிநீரை எடுத்துவந்து விநியோகம் செய்கின்றோம்.
சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு குடிநீரை எடுப்பதற்கு நாங்கள் வெளியே சென்றிருந்தவேளை பிரதேச செயலர் எம்மை தொலைபேசி மூலம் அழைத்து டீசலை பெறுமாறு கூறியிருந்தார். நாங்கள் வெளியே நின்றதன் காரணமாக எரிபொருள் வழங்கிய நிலையத்திற்கு உடனடியாக எம்மால் வருகைதர முடியவில்லை.
ஆகையால் எமக்காக ஒதுக்கப்பட்டிருந்த எரிபொருளானது விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். எனவே உரியவர்கள் இந்த நிலையை கருத்தில் கொண்டு எமக்கான எரிபொருளை வழங்குவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றார்.
காரைநகர் பிரதேச செயலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதுகுறித்து வினவியபோது,
தண்ணீர் பேழைகளுக்கான டீசலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்துக்கொண்டு அவற்றினை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு தொலைபேசி மூலம் கூறினேன். ஆனால் அவர்கள் வந்து அந்த டீசலை பெற்றுக்கொள்ளவில்லை.
எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நின்றவர்கள் தமக்கு எரிபொருளை வழங்குமாறு கூறி வாதிட்டதால், அனைவரது பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு வரிசையில் நின்றவர்களுக்கு டீசல் வழங்கப்பட்டது. ஆகையால் குடிநீர் விநியோகம் செய்பவர்களுக்கு டீசலை வழங்க முடியவில்லை.

அடுத்த கட்டம் டீசல் கிடைக்கும்போது குடிநீர் விநியோகம் செய்வோருக்கு முனுரிமைப்படுத்தி டீசலை வழங்குவோம் என்றார்.
பிறசெய்திகள்