
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தொகையை பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒப்படைத்திருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த பணத்தொகை தொடர்பில் நீதிமன்றுக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிவான், உடனடியாக அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 4 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, அவர்களை தலா 5 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பிறசெய்திகள்