
இலங்கையின் மூன்றிலொரு குடும்பம் கடந்த ஆறு மாதத்தில் தங்களது பிள்ளையின் நடத்தையில் எதிர்மறையான மாற்றத்தை அவதானித்துள்ளது என சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டுள்ள சூழலில் இந்த நிலை காணப்படுவதாக சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது. சேவ் த சில்ரன் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 2300 குடும்பங்களை அடிப்படையாக வைத்து சேவ் த சில்ரன் ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட நான்கில் மூன்று குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளின் உணர்ச்சி மற்றும் மனோநலத் தேவைகளிற்கு இடமளிப்பதற்காக அவர்களுடன் அதிகநேரத்தை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
அதிகரிக்கும் பணவீக்கம், நாளாந்த மின்வெட்டு, உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றிற்கான தட்டுப்பாடுகள் குடும்பங்களை சமாளிக்கும் திறனுக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளன என தெரிவித்துள்ள சேவ் த சில்ரன், குடும்பங்களின் பொருளாதார அழுத்தம் காரணமாக பத்தில் ஒரு குழந்தை பசி உணர்வை இழந்துள்ளது வன்முறை குணம் அதிகரித்துள்ளது.
ஐந்தில் ஒரு குழந்தையின் உறக்க நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஏனையவர்களுடன் வன்முறையான விதத்தில் நடந்துகொண்டுள்ளனர் அல்லது படுக்கையை நனைத்துள்ளனர் எனவும் சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரியை சேர்ந்த லக்மி என்ற பத்து வயது சிறுமி பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்துகள் ஒடாததால் தன்னால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் தனது நகரில் எரிபொருள் வரிசையை பார்த்தாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை எனக்கு கவலையளிக்கின்றது நாடு என்ற ஒன்று இருக்காது என நான் அச்சமடைகின்றேன் எரிபொருள் பிரச்சினை உள்ளது உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள என லக்மி தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக ஏதாவது செய்வதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தால் நான் மக்களின் முன்னேற்றத்திற்காக எதனையாவது செய்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையை சேர்ந்த 37 வயது தாயான நதீசா பெற்றோர் என்ற அடிப்படையில் நிதி நெருக்கடி தன் மீது செலுத்தும் தாக்கம் தனது பிள்ளைகளின் மனோநிலை மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து தெரிவித்தார்.
எனது சிறுவர்களின் நடத்தையில் நான் பெரும் மாற்றங்களை அவதானித்துள்ளேன், அவர்கள் நிலைமை குறித்து கவலையடைந்துள்ளனர்,
ஆனால் அவர்கள் அதனை காண்பிக்கின்றார்கள் இல்லை, முன்னர் போன்று என்னால் தற்போது அவர்கள் விரும்புவதை கொடுக்க முடியாததால் அவர்கள் கவலையடைந்துள்ளனர், தங்கள் பெற்றோருக்கு நிரந்தர வருமானம் இல்லை என்பது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
முன்னர் போன்று அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் முன்னர் போன்று வெளியில் விளையாட செல்வதில்லை. நாளை என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனநலப்பாதிப்பில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் போதிய வளங்கள் இல்லாததால் இந்த வகையான உதவிகள் தேவைப்படுபவர்களிற்கு மனநல மற்றும் உளவியல் உதவிகளை வழங்க முடியாத நிலையில் நாடு காணப்படுகின்றது எனஐநாவின் இலங்கைக்கான மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமை திட்டம் தெரிவிக்கின்றது.
உரிய ஆதரவில்லாவிட்டால் ,பொருளாதார நெருக்கடி சிறுவர்களின் மனநலம் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதிகரிக்கலாம் நீண்டகால நல்வாழ்விற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படலாம்.
கடினமான நெருக்கடியான அமைதியற்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் அதிக அழுகை அலறல் அதிகளவு ஆக்ரோசமான நடத்தை,அல்லது வன்முறை மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் மூலம் தங்கள் அழுத்தத்திற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என சேவ் த சில்ரனினின் இலங்கைக்கான இயக்குநர் ஜூலியன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
சிலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள் ஒடுங்குவார்கள் இதுவே இலங்கையில் இடம்பெறுவதை நாங்கள் காண்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் நெருக்கடியை புரிந்துகொள்வதற்கு சிரமப்படுவார்கள் நெருக்கடியை புரிந்துகொண்டு அதனை சமாளிப்பதற்கு குடும்பத்தவர்கள் நண்பர்களின் உதவி அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், சிறுவர்களிற்கு ஆதரவுகிடைக்காவிட்டால் அறிகுறிகள் மேலும் மோசமடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உணவு சுத்தமான நீர் மருந்து ஏன் கல்வியை கூட பெறுவது குறித்த தொடர்ச்சியான கவலைகள் இலங்கை சிறுவர்களை கடுமையாக பாதிக்கின்றன அரசாங்கம் இந்த நெருக்கடிக்கு பேண்தகு தீர்வை முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்