கடன் பிரச்சினை; தன்னைத் தானே கட்டி வைத்து நாடகமாடிய விமானப்படை வீரர்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பகுதியில் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப் படைவீரர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தன்னைத் தானே காட்டுப் பகுதியில் கட்டி வைத்து நாடகமாடியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிதென்னை பகுதியில் இன்று வியாழக்கிழமை (28) காலையில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியிலிருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அங்கு சென்றபோது விமானப்படை வீரர் என தெரிய வந்துள்ளது.

அத்துடன் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள் என வாசகம் எழுதப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளதை கண்டு அவரை மீட்டு உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்

இதனை தொடர்ந்து குறித்த விமானபடை வீரரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மட்டக்களப்பு விமானப்படை படை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாவே என்ற விமானபடை வீரர் படை முகாமிலிருந்து விடுமுறைக்காக வீடு சென்றவர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை (27) காலை ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து மகியங்கனைக்கு செல்லும் பஸ்வண்டியில் பிரயாணித்து மாலை 3.15 மஹியங்கனையைச் சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து பொலன்னறுவை பஸ்ஸில் பயணித்து செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை மாலை 6.30 வந்தடைந்த நிலையில், மட்டக்களப்பு செல்வதற்காக செவினப்பிட்டி சந்தியில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடியதாகவும் அதன்போது பின்னால் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோரால் தனது தலையில் தாக்கப்பட்டு தனது முகத்தை மூடியதாகவும் பின்னர் தன்னை அந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சுமார் 2 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியிலிருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல் வாடி ஒன்றுக்கு அருகில் அவரின் ஆடைகளால் அவரது காலையும் கையையும் கயிற்றால் கட்டி மரத்துடன் கட்டப்பட்டதுடன் அந்த மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுவார்கள் என வாசகம் எழுதப்பட்டு தொங்கவிட்ட பின் தப்பி ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பத்தில் படைவீரருக்கு எதுவிதமான காயங்களும் இல்லாததையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தில் மீண்டும் குறித்த விமானப் படைவீரரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாட்டு ஒன்றில் அதிக பணத்தை இழந்துள்ளதாகவும் முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம் வாங்கி அந்த கேம் விளையாட்டில் இழந்ததையடுத்து கடனாளியாகியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

எனவே இதற்கு தீர்வு காண்பதற்காக தான் செவினப்பிட்டி கடை ஒன்றில் பிரிஸ்டல் போட் மற்றும் மாக்கர் வாங்கியதுடன் வேறு கடையில் கயிறு ஒன்றையும் வாங்கி கொண்டு ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியை தாண்டி மட்டக்களப்பு பிரதான வீதியில் இறங்கி வீதியில் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்குச் சென்று பிரிஸ்டல் போர்ட்டில் குறித்த வாசகத்தை எழுதி தொங்கவிட்டு பின்னர் உடைகளை கழற்றிவிட்டு உள் ஆடையுடன் தன்னைதானே கயிற்றால் கட்டி கொண்டு இஅவ்வாறு நாடகமாடியுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *