பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது! – நீதி அமைச்சர்

பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும்

நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பங்கரமான நிலைமையாகும். போராட்டத்துக்குள் பயங்கரவாதிகளும் நுழைந்திருக்கின்றனர்.

உண்மையான போராட்டக்கார்களின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கின்றேன். அவர்களுடன் இணக்கப்படாட்டுக்கு நாங்கள் வந்தோம். அவர்களின் கோரிக்கையாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகும். அதுவரைக்கும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது.

போராட்டம் மூலம் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலகியது அதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டும். அதற்கு ஏற்றவகையில் அவர்களின் போராட்டம் மாற்றமடையவேண்டும்.

அதற்கு அப்பாலும் அவர்கள் யாரும் வேண்டாம் என்றால் இதனை பொறுப்பேற்பது யார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் யாரையாவது ஜனாதிபதியாக பெயரிடவேண்டும்.

இவ்வாறு இல்லாமல் போராட்டத்தை மேற்கொள்வதாக இருந்தால் அது நாட்டில் ஸ்திரத்தன்மையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை சீரழிக்கும் செயலாகும்.

இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டன. பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தியது. 400பஸ்கள் எரிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகளை அழித்தார்கள்.

40க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளுக்கு தீ வைத்தார்கள். 12 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரை கொலை செய்தார்கள். இவ்வாறாதொரு நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லவே முயற்சிப்பதாக எமக்கு விளங்குகிறது. இதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது.

அத்துடன், போராட்டத்தில் மறைந்து பாரிய குற்றச்செயல்களை மேற்கொண்டவர்களையே கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதனை யாரும் எதிர்க்கவில்லை.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எவருக்கும் எந்தவித நெருக்கடியையோ அவர்களை கைதுசெய்யவோ கூடாது என பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றோம். அவர்கள் குற்றச்செயல்களை அனுமதிப்பதில்லை.

அதேபோன்று இந்த போராட்டத்தின் மூலம் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவே அவசரகால சட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் மக்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *