
வழமையான எரிபொருள் தாங்கிக்கு மேலதிகமாக மற்றுமொரு தாங்கி பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டியொன்று பண்டாரகம ரம்புக்கனை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் டீசல் ஏற்றியதை கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, குறித்த முச்சக்கரவண்டியை ஆய்வு செய்த போது இந்த மோசடி வெளிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டீசல் முச்சக்கர வண்டியின் எரிபொருள் தாங்கி கொள்ளளவு பொதுவாக 9 லீற்றர் எனவும், போலி எரிபொருள் தாங்கி 19 லீற்றர் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
பிறசெய்திகள்