தேயிலை மலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த செனை பசு ஒன்றை களவாடி சட்டவிரோதமாக அதை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர்.
குறித்த இச்சம்பவம் தொடர்பில் தொழிற்சங்கம் ஒன்றின் மாவட்ட தலைவர் (ம.ம.மு) ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 08.08.2022 வரை விளக்கமறியலில் வைக்க வலப்பனை நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (28) வியாழக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இராகலை தொழிற்சாலை பிரிவு தோட்டத்தில் தனிநபர் ஒருவரின் செனை பசு தோட்ட தேயிலை மலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த போது கடந்த (27) ஆம் திகதி காணாமல் போயுள்ளது.
இது தொடர்பாக பசுவின் உரிமையாளர் இராகலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இவரின் முறைப்பாட்டை ஏற்ற பொலிஸார் இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு பசுவை தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் (28) அன்று இராகலை தொழிற்சாலை பிரிவு தோட்டத்தில் தொழிற்சங்கத்தலைவர் ஒருவரின் காணியில் செனை பசுவின் தோலும், கால்களும் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இராகலை குற்றத்தடுப்பு பொலிஸார் விரைந்து சென்று இவைகளை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசு குட்டி ஈன இருந்த நிலையில் அதை கடத்தி ஆறு பேர் கொண்ட குழுவினர் பசுவை சட்ட விரோதமாக வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த இச்சம்பவம் தொடர்பில் இராகலை சின்ன ஒப்ராசி தோட்டத்தை சேர்ந்த நால்வர் மற்றும் இராகலை தொழிற்சாலை பிரிவு தோட்டத்தை சேர்ந்த இருவருமாக ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மலையகத்தின் பிரபல தொழிற்சங்கம் ஒன்றின் இராகலை பிரதேச மாவட்ட தலைவர் ஒருவரும் அடங்குவதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையில் இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றிருந்த ஆடுகள் திருட்டு தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மற்றும் உபகரணங்கள் திருட்டு சம்பவங்களுக்கும்தொடர்புள்ளமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆறுபேரின் மீது திருட்டு சம்பவ வழக்கு பதியப்பட்டு (28) மாலை சந்தேக நபர்களை வலப்பனை நீதிமன்ற மன்றத்தில் ஆஜர் செய்த போது நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச வழக்கை விசாரணை செய்து சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்