நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் என்பது முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடையும் நிலை உருவாகி வருகின்றதாக யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது பாடசாலைகளின் முடக்கம் என்பது கொவிட்19 இனால் ஏற்பட்ட பாடசாலை முடக்கத்தினை விட ஒரு மேலான படிநிலைக்குச் சென்று பல்வேறு வடிவங்களில் மாணவர்களை பாதிப்பதாக அமைகின்றது.
கொவிட் 19 காலங்களில் ஓரளவிற்கு உணவிற்கு பஞ்சம் இருக்கவில்லை அத்துடன் வீட்டில் இருந்து கற்கக்கூடியதாகவும் கற்றல் உபகரணங்களை வாங்கக்கூடியதாகவும் இருந்தது.
ஆனால் இன்றைய சூழலில் பொருளாதார முடக்கம் காரணமாக மாணவர்களின் பெற்றோர்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது தற்போது மென்மேலும் அதிகரித்துச் செல்கின்றது.
கடந்த மாதம் இலங்கையின் பணவீக்கமானது 60.1% சதவீதத்திற்கு சென்று விட்டதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றது . பணவீக்கமானது டிசம்பர் மாத அளவில் இரட்டிப்பாகும் என சொல்லப்படுகிறது.இதனால் மாணவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அவர்கள் கல்வி கற்பதற்கான உடல்,உள,ஆரோக்கியத்தினை இழந்து விடுகிறார்கள்.
எரிபொருள் என்பது மிகவும் கடினமான சூழ்நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் எரிபொருளினைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி வளம் அரசாங்கத்திடம் இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இனி வரும் காலங்களில் பொதுப்போக்குவரத்து சேவைகள் மிகவும் முடக்கமான நிலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.இதனால் மாணவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்பது என்பது முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படலாம். இது இலங்கையின் கல்வி தராதரத்தினை கீழ் கொண்டு போகப்போகின்றது.
களவு,கொள்ளை போன்ற சமூகத்தை , கல்வி அறிவு இல்லாத நிலையால் உருவாக்கக்கூடிய சூழல் உருவாகி வருகின்றது. இது ஒரு பாரதூரமான பிரச்சனையாக மாறுவதனை தடுக்க அடிப்படை பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பது என்பது இங்கு இருக்கின்ற அரசியல்,சமூக சூழ்நிலைகளில் இலங்கைக்கு ஒரு எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது. இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு தயாராக இருந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ,சில வளர்ந்த நாடுகள் , சரியானதொரு பொருளாதார சீர்திருத்த முகாமைத்துவத்தை காண்பிக்காதவகையில் இலங்கைக்கு நிதி கொடுப்பதனை நிறுத்திக் கொள்வோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளது.
எனவே இலங்கை அவ்வாறானதொரு பொருளாதார முன்னேற்றத்திற்கான சரியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அரசியல்,பொருளாதார ,சமூகத் திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது,அவ்வாறு உருவாக்குவதற்கான அரசியல் சூழல் இலங்கையில் இல்லது இருப்பது துரதிஷ்டவசமாகும் என்றார் .
பிறசெய்திகள்