சிலாபம் முன்னை நாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பஞ்ச ஈஸவரங்களில் முதன்மை பெற்றதும் புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோத்ஸவம் எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய பிரதம குருவும் , தர்மகர்த்தாவுமான கலாநிதி சிவஸ்ரீ எஸ்.பந்தமநாபக் குருக்கள் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியாலாளர் சந்திப்பு இன்று மாலை சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலய அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28 நாட்கள் தொடர்ச்சியாக உற்சவங்கள் நடைபெறவுள்ளன.

அத்துடன், செப்டம்பர் மாதம்  2 ஆம் திகதி விநாயகர் உற்சவமும், 3 ஆம் சுப்ரமணிய உற்சவமும், 4 ஆம் திகதி மஹா விஷ்ணு உற்சவமும், 5 ஆம் திகதி தீ மிதிப்பு உற்சவமும், 6 ஆம் திகதி பிக்ஷ௱டனர் உற்சவமும், 7 ஆம் திகதி நடேசர் உற்சவமும் , 8 ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 9 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 10 ஆம் திகதி தீர்த்தோற்சவ நிகழ்வுகளும் விஷேட உற்சவ நிகழ்வுகளாக நடைபெறவுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் சுகாதார பிரிவினரின் முழுமையான வழிகாட்டலில் மேற்படி உற்சவ நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் இங்கு வருகை தரவுள்ளமையால், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றல், முக கவசம் அணிதல்  , கிருமி தொற்றுநீக்கி பயன்படுத்தி கைகளை கழுவுதல் உட்பட சுகாதார வழிகாட்டல்களை இங்கு வரும் பக்தர்கள் முழுமையாக பின்பற்றி இந்த உற்ச நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *