
கண்டி குண்டசாலை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் மகாவலி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி காணாமல் போன சிறுவர்களை தேடும் பணி தொடர்கிறது. நேற்று (31) மாலை வரை சிறுவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பல்லேகலையில் வசிக்கும் கமலதாசன் அகேஷ் (13), புனிதராஜ் (14) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
29ஆம் திகதி மாலை விளையாடச் செல்வதாக தமது வீடுகளில் கூறிவிட்டு சிறுவர்கள் வெளியில் சென்றுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, காணாமல் போன சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட காலணிகள் மற்றும் ஆடைகள் பல்லேகலையில் உள்ள தும்பரை சிறைச்சாலைக்கு பின்னால் உள்ள மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆறு நண்பர்கள் இந்த இடத்திற்கு நீராடச் சென்றதாகவும், நீரோட்டத்தில் சிக்கி நடுநடுவில் காணாமல் போன இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இப்பிரதேசத்தில் மகாவலி ஆறு மிகவும் ஆழமானது எனவும் 25 அடிக்கு மேல் உள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பொது மக்கள் குளிப்பதற்கு வராத இடம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் மேற்பார்வையில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களைப் பயன்படுத்தி இரண்டு நாட்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை (31 மாலை) காணாமல் போன சிறுவர்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.