IMHO நிறுவனத்தின் சுயத்தொழில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மவுசாகலை 320ஐ கிராம சேவகர் பிரிவில் அண்மையில் தையல் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையில் இளைஞர் யுவதிகளின் சுயத்தொழில் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் பாடசாலை கல்வியை தொடர்ந்து தொழற்கல்வியை வழங்கும் நோக்கிலும் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, IMHO நிறுவனத்தின் முகாமையாளர் கந்தையா விக்னேஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, சிறப்பு அதிதிகளாக அம்பகமுவ பிரதேச செயலகத்தின் கௌரவ பிரதேச செயலாளர் , மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.செண்பகவள்ளி மற்றும் கௌரவ உறுப்பினர்கள் MP.ஆனந்தன் மற்றும் P.யோகேந்தின் ஆகியோரும், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள், மவுசாகலை பிரிவு கிராம உத்தியோகத்தர் M.சௌந்தர், மவுசாகலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ரொமேஸ் தர்மசீலன், பாடசாலை அதிபர்கள், IMHO நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிலையத்தின் ஊடாக பயனடையும் மவுசாகலை, பிரவுன்லோ, கிறவன்எலிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இதன்போது இனைந்து கொண்டனர் என்பது சிறப்பு அம்சமாகும்.
மவுசாகலை பிரதேசத்தில் முதலாவதாகவும் முன்னுதாரணமாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி நிலையத்தை போல நமது பிரதேசத்தில் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பயிற்சி நிலையங்களை அமைத்து அதன் ஊடாக இளைஞர் யுவதிகளின் தொழிற்கல்வியை மேம்படுத்த IMHO நிறுவனத்தின் ஊடாக முழுமையாக முயற்சிப்பதாக இதன்போது குறித்த நிறுவன முகாமையாளர் திரு.க.விக்னேஷ்வரன் கருத்து தெரிவித்தார்.
இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கருதி முன்னின்று சேவை வழங்கும் IMHO நிறுவனம் மற்றும் இந்த வேலைத்திட்டத்திற்காக முழுமையாக உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மவுசாகலை பிரிவு பொதுமக்கள் விசேடமான நன்றிகளை தெரிவிக்கின்றனர்.




பிறசெய்திகள்