எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அடுத்த பெட்ரோல் விநியோகம் எப்போது என கேட்க மோட்டார் சைக்கிளில் பந்துலகம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த தாயும் மகளும் எரிபொருள் பெறுவதற்காக வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதாக அனுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒலயவாவ, ஸ்ரவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பி.டி.அனோமா ரணசிங்க என்ற பெண் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த உயிரிழந்தவரின் தாயார் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

டீசல் எடுக்க வந்து பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தின் மின்கலம் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்தவர் தனது தாயுடன் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்து எப்பொழுது அடுத்த எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வினவியதாகவும், மோட்டார் சைக்கிளில் திரும்பிச் செல்ல முற்பட்ட போது, டிப்பர் திடீரென புறப்பட்டு தாய் மற்றும் மகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *