
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் எஸ்.ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் செயலரின் தனிப்பட்ட தங்குமிடத்தில் இருந்து பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு சனிக்கிழமை இரவு 65 லீற்றர் எரிபொருளை மீட்டு இருந்தனர்.
அது தொடர்பில் பிரதேச செயலர் தெரிவிக்கையில்,
அலுவலக மின்பிறப்பாக்கி மற்றும் வாகன தேவைக்காக சுமார் 50 லீற்றரை சேமித்து வைத்திருந்தோம்.
அதேவேளை என்னுடைய சொந்த தேவைக்காக 8 லீற்றர் பெற்றோலை கடந்த இரு வாரங்களில் பெற்று சேமித்து வைத்திருந்தேன். எனது வீடு யாழ்ப்பாணத்தல் உள்ளமையால், வீடு சென்று வர மோட்டார் சைக்கிள் தேவைக்கு என்று அதனை சேமித்து வைத்திருந்தேன்.
அத்துடன் கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவிய வேளையில் சமையலுக்காக வாங்கி வைத்திருந்த சுமார் 3 லீற்றர் மண்ணெண்ணெய் என்பவற்றையே பொலிஸார் மீட்டனர்.
அலுவலகத் தேவைக்காகவும், சொந்தத் தேவைக்காகவும் வைத்திருந்த எரிபொருளை மீட்டு விட்டு, ஏதோ தாம் பெரும் பதுக்கலை கண்டுபிடித்தது போன்று செய்திகளை பரப்பியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைகளை மீறி இரண்டு எரிவாயு சிலிண்டரை பெற முனைந்துள்ளார். அதற்கு எமது பணியாளர்கள் மறுப்பு தெரிவித்து எனது சம்மதத்தை பெற்று வருமாறு கூறி இருந்தனர்.
அதேபோன்று மறுநாள் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நடைமுறைகளை மீறி தென்னிலங்கைவாசிக்கு டீசல் பெற்றுக்கொடுக்க முயன்றுள்ளார். அதற்கும் எமது கிராம அலுவலர் இடமளிக்கவில்லை.
அதேவேளை பொலிஸார் வேறு நபர்களின் மோட்டார் சைக்கிள்களை பெற்று வந்து எரிபொருள் பெற்று செல்வதனை தடுத்து இருந்தோம். அத்துடன் நடைமுறைகளை குழப்பி சட்டவிரோதமாக எரிபொருளை பெற முனைந்தவர்களையும் தடுத்துள்ளோம்.
இவ்வாறான நிலையிலையே எம் மீது வீண் பழி சுமத்தும் நோக்குடன் எமது அலுவலகத் தேவை மற்றும் எனது தனிப்பட்ட தேவைக்காக சேமித்து வைத்திருந்த எரிபொருளை மீட்டு அபாண்டமான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளனர்=என்றார்.