
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான கையூட்டல் வழக்கு ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான கையூட்டல் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை கடந்த 22ஆம் திகதி நியமித்திருந்தார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவர், ஜப்பானின் தயிஸே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக, சமூக வலைத்தளங்கள் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
இதனையடுத்து விசாரணை நிறைவுறும் வரையில், அமைச்சு பதவியில் இருந்து தாம் விலகுவதாகவும் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியதுடன், அது குறித்து விசாரணை நடத்துமாறும், ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.
இதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவிடம், கடந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்திருந்தார்.
அதன்படி, நேற்றைய தினம் அந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்