மூதூரில் கடலில் மூழ்கிய குடும்பஸ்தரை மீட்கும் பணி தொடர்கிறது!(படங்கள் இணைப்பு)

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கங்கை பாலத்திற்கு கீழ் உள்ள கடலில் மூழ்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காணாமல் போன குடும்பஷ்தரின் சடலத்தை இன்று திங்கட்கிழமை  இரண்டாவது நாளாகவும் கடற்படையினருடன்  பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடாத்தியும் இதுவரையில் சடலம் கண்டு எடுக்கப்படவில்லை.

இவ்வாறு கடலில் முழ்கி காணாமல் போனவர் 07 வயது ஆண்பிள்ளையினதும், 02 வயது பெண் பிள்ளையினதும் தந்தையுமான மூதூர் – இரால் குழி பகுதியைச் சேர்ந்த  யுவான் விக்டர் விரேன் வயது (43) என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

குறித்த நபர் கடலில் படகொன்று நீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு நீந்திச் சென்று அப்படகினை கரைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.நேற்று மாலையிலிருந்து சடலத்தை தேடும் பணி முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வில்லை என மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கருத்து தெரிவிக்கும் போது.

படகினை கரைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே தமது உறவினர் உயிரிழந்துள்ளார். தமது உறவினரின் சடலத்தை தேடுவதற்கு படகுகளுக்கு மண்ணெண்ணெய் இல்லாமையால் அதிகமான படகுகளால் தேடுதல் பணியை முன்னெடுக்க முடியவில்லையென கவலை தெரிவித்தனர்.

அத்தோடு கடற்படையினரின் இரண்டு படகுகளும் பிரதேச மக்களின் ஒரு படகு மாத்திரமே சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.அதேவேளை கரை வளைகளைக் கொண்டு மீனவர்கள் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் இதுவரை சடலம் கண்டெடுக்கப்படவில்லை.

தொடர்ந்தும் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *