
ஆப்கான்,ஓகஸ்ட் 02
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2011 இல் அதன் நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா அமைப்பிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடியாக, அல்-ஜவாஹிரி கொலை அமைந்துள்ளது.
”நீதி வழங்கப்பட்டுள்ளது, இந்த பயங்கரவாத தலைவர் இப்போது இல்லை” என்று பிடன் வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு சிறப்பு உரையில் கூறினார்.
அல்-ஜவாஹிரியின் குடும்பம் காபூலில் தங்கியிருப்பதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த தாக்குதலில் அல்-ஜவாஹிரியின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அல்லது பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று பிடன் தெரிவித்தார்.
செப்டம்பர் 11, 2001 இல் அமெரிக்கா மீதான தாக்குதல்களை ஒருங்கிணைக்க உதவியதாக அய்மன் அல் ஜவாஹிரி குறிப்பிடப்பட்டார். எகிப்திய அறுவை சிகிச்சை நிபுணரான அவரது தலைக்கு 25 மில்லியன் டொலர் வெகுமதி அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக அமெரிக்க அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஏவுகணைகளைப் பயன்படுத்தி சிஐஏ ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அப்போது அல் ஜவாஹிரி தனது பால்கனியில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
காபூலில் தாக்குதல் நடத்தப்பட்டதை தலிபான்கள் உறுதிப்படுத்தினர், மேலும் இது “சர்வதேச கொள்கைகளை மீறுவதாக” கண்டனம் செய்தது.
இதேவேளை, தலிபான் ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஹக்கானி அமைப்பின் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில், தங்கியிருந்த போதே ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.