ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை: இன்று பதவியேற்கின்றார் நிமல் !

மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

சமீபத்தில் ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் அவர், லஞ்சம் வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை கடந்த 6ஆம் திகதி இராஜினாமா செய்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி இராஜினாமா செய்ததையடுத்து, விசாரணைகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் அதனை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

குழுவின் அறிக்கையின் பிரகாரம் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நேற்று அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், இன்று மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *