நாவலப்பிட்டி தோட்டப் பகுதியில் மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்!

நாவலப்பிட்டி – கெட்டபுலா கீழ் பிரிவு – அக்கரவத்தை தோட்டப் பகுதியில் மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 36, 46 மற்றும் 47 வயதுடைய மூவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

குறித்த பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கயிற்றின் உதவியோடு கடக்க முயன்ற போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
தோட்ட தொழிலுக்காக சென்ற குறித்த பெண் பாலத்தை கடக்க முற்பட்ட போது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டமையை அடுத்து அவரை காப்பாற்ற சென்ற மற்றுமொருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

அவர்கள் இருவருக்கும் கயிறை வழங்கி அதனை பிடித்து கொண்டிருந்த ஒருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, லக்ஸபான – பொல்பிட்டிய பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாட்டியும் பேத்தியும் சடலமாக மீட்கப்பட்டனர். 60 வயதான பாட்டியும் 5 வயதான பேத்தியும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து மீள வீட்டுக்கு அழைத்து சென்ற போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதேவேளை, மலையகத்தின் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.

நில்வளா கங்கை, களுகங்கை, மகாவலி கங்கை உள்ளிட்ட கங்கைகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆறுகளை அண்டி வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள வீதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் கோரியுள்ளது. நேற்றைய தினம் அதிகளவான மழைவீழ்ச்சி நாவலபிட்டி பகுதியில் பதிவாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தரவுகளுக்கு அமைய நாவலபிட்டி பகுதியில் 180 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு பிட்டபெத்தர பகுதியில் 151 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் குறிப்பிட்டார்.

அத்துடன் புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.

குறித்த கடற்பிராந்தியங்களுக்கு மீள் அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *