இலங்கையர்கள் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை வர்த்தக வங்கியின் ஊடாக ரூபாவாக மாற்றுவதற்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்த சுற்றறிக்கை நிதி அமைச்சினால் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். இதன்படி பிரஜைகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தையும் வர்த்தக வங்கியின் ஊடாக ரூபாவாக மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இணை அமைச்சரவைப் பேச்சாளர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கையில், 10000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வெளிநாட்டு நாணயங்களை இந்த காலப்பகுதியில் மாற்றவோ அல்லது கணக்கில் வைப்பிலிடவோ முடியும்.
இந்த காலகட்டத்தில் தனிநபர்கள் நிதி ஆதாரத்தை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் வங்கிகளிடம் சமர்ப்பிக்க கோரப்பட மாட்டார்கள். கடந்த மாதமும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் பொது மன்னிப்புக் காலம் ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.
இதனடிப்படையில், பிரஜைகள் பொதுமன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி தமது வெளிநாட்டு நாணயங்களை வங்கி அமைப்பில் வைப்பிலிட முடியும் என தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்