சீனாவின் கண்காணிப்பு கப்பலான ‘யோங் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிக்க அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் சகல தரப்புடனும் கலந்துரையாடியே மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஒன்று இந்த மாதம் 11ம் திகதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதுகுறித்து எழுந்த கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறினார்.
எண்ணெய் மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பிரவேசிக்க இந்த கப்பல் அனுமதி கோரியுள்ளது.
சீனாவும் இலங்கையும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
எனினும் சகல தரப்புடனும் கலந்துரையாடி இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் வைத்து தெரிவித்தனர் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்.
பிறசெய்திகள்