
நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் 254 குடும்பங்களைச்சேர்ந்த 648 பேர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரச அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் நான்கு பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிக இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா, தலாவாக்கலை ஆகிய பகுதியிலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்ததுடன், அவரது சடலம் பொலிஸ், இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
மேலும் கினிகத்தேனை – பொல்பிட்டி பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரும், அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.
பிறசெய்திகள்