யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலே முன்னெடுக்கப்படும் தமிழியல் ஆய்வு மாநாடு, இதற்குள்ளேயே சுருங்காமல் தமிழ் மக்கள் சார்ந்த பாரிய மாநாடாக மாற வேண்டும் என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் சார்ந்த மாநாடுகளை நடாத்தி தமிழின் புகழை உலகறிச் செய்வதற்காக, கோடிக்கணக்காக பணம் இங்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான மாநாடுகள் பல்கலைக்கழகத்துக்குள்ளே சுருங்கி இருக்காமல் தமிழ் மக்கள் சார்ந்த மாநாடாக வெளியே வரவேண்டும்.
தமிழியல் பற்றிய ஆய்வுகளை முன்னர் ஆரம்பித்தவர்கள் மேலைத்தேயர்கள். ஜேர்மன் மற்றும் அமெரிக்க நாட்டவர்கள் இவ்வாறான தமிழ் ஆய்வுகளில் ஆர்வம் காட்டியவர்கள். இதன் ஒரு பகுதியாகத் தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு செல்லப்பட்ட ஏடுகள் மொழி பெயர்க்கப்பட்டு மருத்துவ துறையில் பயன்படுகிறது.
ஆகவே தான் ஈழத்துக்கு உரிய விடயங்களை யாழ்ப்பாணத்தின் இதயமாக இருக்கின்ற யாழ் பல்கலைக் கழகம் ஆய்வு செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது. இன்னும் பல ஏடுகள் ஆய்வு செய்யப்படாமல் கிராமங்களில் இருக்கிறது. ஊர் பெயர் தொடர்பான வடபுலத்து ஆய்வுகள் கூட இன்னமும் சரியாகச் செய்யப்படவில்லை.
யாழ்ப்பாண ஆரியகுளப் பிரச்சினை அண்மையில் நடைபெற்றது. இதன்போது குளம் ஆரியச்சக்கரவர்த்தி காலத்துக்கு உரியது என்று நாம் வாதாடுவதற்கு சில நூல்கள் உதவின. இந்த நிலையில் தான் நாம் உள்ளோம். எமக்கு சொந்தமான விடயங்களை நாம் முழுமையாக திருப்திகரமாக ஆய்வு செய்யவில்லை என்பது தான் உண்மை.
நாவற்குழியில் குதிரைப்படையும், ஆனைப் பந்தியில் யானையும் அன்று மன்னர்கள் வைத்திருந்தார்கள், ஆனால் அவை பற்றிய தடயங்கள் குறிப்புகள் இல்லை.
ஆகவே இந்தப் பணிகளை கல்வியாளர்கள், யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் ஒரு பரந்த ஆய்வாக மேற்கொள்ள வேண்டும்.- என்றார்.
பிறசெய்திகள்