
சர்வகட்சி அரசில் இணை வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று அவர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அந்த ஆதரவு எவ்வகையிலான ஆதரவாக அமையும் என்பது தொடர்பில் வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார் சம்பந்தன்.
‘பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சர்வகட்சி அரசு ஒரு வழிமுறையாகும். அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றது. ஆனால், எந்த வகையிலான ஆதரவை அல்லது பங்களிப்பை வழங்குவது என்பது கட்சி ரீதியாகவே தீர்மானிக்கப்படும்’ – என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் இணையவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் அனுப்பிய கடிதத்துக்கும் சம்பந்தன் பதில் அனுப்பியுள்ளார். ‘சர்வகட்சி தேசிய வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும். நாடு எதிர்கொண்டுள்ள அனைத்துத் தேசியப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்’ என்று தனது பதில் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் சம்பந்தன்.