தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, வடக்கு – கிழக்கில் அபிவிருத்தி – கொள்கை பிரகடன உரையில் ரணில்

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது, நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். எனவே, சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இவ்வாறு 9 ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் இன்று (3) ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும்.அத்துடன் வடக்கில் – கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

போரால் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது.

எதிர்காலத் திட்டம்
எமது பொருளாதாரம் ஏன் விழுந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காலத்துக்கு காலம் ஏற்றல் போல் பொருளாதார கொள்கைகளை மாற்றுவது நல்லதா என்பதை பார்க்க வேண்டும்.

நிலையான பொருளாதாரம் 2026ஆம் ஆண்டுக்குள் நிறுவப்பட வேண்டும்.

இதற்கு நீண்டகாலத் திட்டங்கள் என்னால் கையாளப்பட்டு வருகின்றன. நான் மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்ல, நாட்டின் எதிர்காலத்துக்காக உழைக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து இந்த நிலையை மாற்ற வேண்டும். அனைத்து நாடுகளுடனும் இணைந்து நாம் வேலைசெய்வோம்.

அத்தியாவசிய சேவைக்கு தீர்வு
தற்போதுள்ள மின்வெட்டைக் குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது.
பயிர்செய்கைக்காக எதிர்காலத்தில் தேவைப்படும் உரத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
சமையல் எரிவாயு பிரச்சினை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில் வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும்.
உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு
இரு வருடம் நீடிக்கும்
அதேநேரம் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்த ஆண்டு இறுதிவரை அதை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை எரிபொருள் தட்டுப்பாடாகும்.
எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும்.
எனவே நமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றை நாம் ஆரம்பிக்க உள்ளோம்.
இதன்போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும்.
மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும்.
இந்த கஷ்டங்களிலிருந்து மீளுவதற்கு நாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் நமது நாட்டில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படாதவாறு பலமிக்க அடித்தளமொன்றினை இடுதல் வேண்டும்.

சர்வகட்சி அரசுக்கு அழைப்பு
சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயற்படுவது அல்ல. அனைவரும் இணைந்து செயற்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும். இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்தியாவுக்கு நன்றிக்கடன்
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளெழுவதற்கு, இந்தியா வழங்கிய ‘உயிர் மூச்சே’ காரணம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக இந்திய பிரதமருக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

போராட்டக்காரரை வேட்டையாடவில்லை
அறவழி போராட்டக்காரர்களை நான் வேட்டையாடவில்லை. அவர்களை பாதுகாப்பேன். ஆனால் வன்முறையாளர்கள்மீது சட்டம் பாயும்.
அஹிம்சை வழியில் இடம்பெற்று வந்த போராட்டங்கள் மெதுவாக திசை மாறின.

எரிபொருள் வரிசையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பாதாளக்குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அமைதி வழிப் போராட்டக்காரர்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கான முன்னிற்பதற்காகவும் விசேட நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும்
ஒரே தாயின் பிள்ளைகளாக அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே எனது ஆசையாகும்.

என்னுடைய கொள்கைகளில் இருந்து நான் ஒரு போதும் விலக மாட்டேன். இளைஞர்களின் ஆதரவோடு நாம் இணைந்து செயற்படுவோம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும். இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். என்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் நான் கொண்டு வருவேன் .– என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *