
கண்டி,ஓகஸ்ட் 03
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மேலதிக ரயில்கள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து முற்பகல் 9.50, பிற்பகல் 2.15, இரவு 7.05 ஆகிய நேரங்களில் குறித்த விசேட ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை இவ்வாறு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் நாவலப்பிட்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் இருந்து கண்டி நோக்கி விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.