
அமெரிக்க,ஓகஸ்ட் 03
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தனது அமெரிக்க விமானப்படை ஜெட் விமானத்தில் தாய்வானில் இருந்து வெளியேறினார் அவரது தாய்வான் விஜயம், சீனாவை கோபப்படுத்தியதுடன், பெய்ஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையே பதற்றங்களை அதிகரித்தது.
சபாநாயகரும் மற்றைய ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் தற்போது தென் கொரியாவுக்கு பயணமாகியுள்ளனர். ஆசியாவுக்கான விஜயத்தின்போது, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.
நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வான் சென்றடைந்தார் முன்னதாக, நான்சியின் தாய்வான் பயணம் குறித்த அறிவிக்கப்பட்டபோது, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எதிர்ப்புகளை மீறி, அங்கு செல்வதில் நான்சி உறுதியாக இருந்ததால் சீனா – அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்தது.
பெலோசி தாய்பேவில் வந்திறங்கிய பின்னர் பதற்றங்கள் நிறைந்ததாகவே இருந்தன. பெலோசி வந்திறங்கிய நேரத்தில் தாய்வான் வான் எல்லைக்குள் 21 சீன இராணுவ விமானங்கள் பறந்தன.
மறுபுறம், நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தாய்வானை சுற்றியுள்ள ஆறு பிராந்தியங்களில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட ‘முக்கியமான’ இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் சீனா – அமெரிக்கா – தாய்வானைசுற்றி தொடர் பதற்றம் நிலவியது.
எனினும் பதற்றங்களை தாண்டி, தாய்வானில் தரையிறங்கியதை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தாய்வானுக்கு சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை பெலோசி பெற்றுள்ளார்.
சீனாவின் பதற்றத்துக்கு காரணம் என்ன?
சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தாய்வான் தமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என ஜனாதிபதி ஸி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் கூறி வருகிறது.
அத்துடன், தேவை ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.
மேலும், தாய்வானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
தாய்வான் சுதந்திர நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. இது சீனாவுக்கு அதிருப்தியை அளித்தது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தாய்வானுக்கான நேரடி பயணம் அமைந்தது.