ஆனமடுவ பகுதியில் நகைக்கடையொன்றில் தங்க நகையை திருடிக்கொண்டு சொகுசு காரில் தப்பிச் சென்ற இருவர் புத்தளம் பொலிஸாரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் தங்கப் பொருட்கள் திருட்டில் ஈடுபட்ட முக்கிய நபருடன் கந்தான பிரதேச சபையின் சாரதியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆனமடுவ பொலிஸ் அதிகாரியொருவரிடமிருந்து புத்தளம் பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி யூ.ஓ.பி டபிள்யூ.ஏ.ஜி சமனுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் SP CAL 4793 கார் கொழும்பு வீதியில் நிறுத்துமாறு கட்டளையிடப்பட்ட போதிலும் தொடர்ந்து பயணித்துள்ளது.
இந்த நிலையில் புத்தளம் நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து திணைக்களத்தின் இரு மோட்டார் சைக்கிள்களினால் குறித்த காரை துரத்திச் சென்று புத்தளம் கொழும்பு வீதியின் தில்லையடி பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
இதன்போது முதலில் ஒரு இலட்சத்து என்பத்தையாயிரம் ரூபா பெருமதியுடைய ஒரு பவுன் எடையுடைய தங்க நகையை வாங்கி, அறுபதாயிரம் ரூபா தருவதாகவும், மீதித் தொகையை ஈடுகட்ட ஒரு பவுன் எடையுள்ள மோதிரத்தை வைத்துக் கொண்டு, பின்னர் எடுத்துச் செல்வதாகவும் சந்தேகநபர்கள் இதன்போது கூறியுள்ளனர்.
பின்னர், குறித்த நபர்கள் மீது சந்தேகம் அடைந்த நகைக்கடை ஊழியர் நகைக்கடை உரிமையாளரிடம் வீடியோ கால் மூலம் விவரங்களை விளக்கியுள்ளார். இதன்போது குறித்த நகைக்கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடையின் உரிமையாளருக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், முதலில் காட்டப்பட்ட தங்க மோதிரத்திற்கு பதிலாக, போலி மோதிரத்தை வைத்துவிட்டு குறித்த தங்க நகையை பரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது புத்தளம் வீதியூடாக தப்பிச் சென்ற காரை நகைக்கடை உரிமையாளர் பின்தொடர்ந்து துரத்திச் சென்ற வேளை தங்க நகையை பரித்துவிட்டு தப்பிச் செல்வதாக ஆனமடுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதன்போது ஆனமடுவ பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி யூ.ஓ.பி டபிள்யூ.ஏ.ஜி சமனுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் புத்தளம் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மிகுந்த பிரியத்தனத்திற்கு மத்தியில் சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பிரதான சந்தேக நபருடன் கைது செய்யப்பட்ட காரின் சாரதி கந்தான பிரதேச சபையின் சாரதியாக கடமையாற்றிவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது தங்க நகை, தொலைப்பேசிகள் மற்றும் 40000 ரூபா பணம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் வாடகை அடிப்படையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட குறித்த காரை கொண்டு வந்ததாக சந்தேக நபர்கள் போலிசாரிடம் கூறியுள்ளார். மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.




பிறசெய்திகள்