
கொழும்பு, ஓக 4
தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காக உருவாக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுத்தல், டொலர்களை ஈட்டுவதற்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற பல பொறுப்புகள் இந்த குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு சமமாக பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சராக நியதிக்கப்பட்ட அவர், சில தினங்களிலேயே அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.
அத்துடன், தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.