வீட்டுக்குள் புதுக் குழப்பம்:ரணிலுக்கு வாக்களித்த கறுப்பாடுகளை எச்சரித்த முக்கியஸ்தர்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரணிலுக்கு வாக்களித்ததாக கூறப்படும் கறுப்பாடுகளை உடனடியாக கண்டுபிடியுங்கள். இது கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகம். முடியாவிட்டால் நீங்கள் 10 பேரும் ராஜினாமா செய்யுங்கள் என காரைதீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கல்முனையைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அ.அரசரெத்தினம் ஆவேசமாக கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், த. கலையரசன், தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் .

மேலும் அவர் கூறுகையில்..

ஜனாதிபதி தெரிவு தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் அனைவரும் அதாவது 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக டளசுக்கு வாக்களிப்பது என்று நீங்கள் முடிவு எடுத்ததாக கூறுகிறீர்கள் .

ஆனால் தேர்தலுக்கு பின்னர் ஒருசிலர் ரணிலுக்கு வாக்களித்ததாக தகவல்கள் வந்திருக்கின்றன..

உடனடியாக அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் .ஏனெனில் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் ரகசியமாக எந்தவிதமான தீர்மானமும் எடுக்க முடியாமல் போய்விடும்.

இந்திய அரசாங்கம் சொல்லி ரணிலுக்கு வாக்களித்தது என்று யாராவது சொன்னால் நீங்கள் டளசுடன் செய்த ஒப்பந்தம் பிரயோசனமில்லை. அதுமட்டுமல்ல மற்றும் ஒரு கேள்வி கட்சி அனைத்தும் சேர்ந்து டளசுக்குக்கு வாக்களிக்குமாறு நீங்கள் தீர்மானம் எடுத்ததாக கூறினீர்கள்.

இது கட்சியின் முடிவா? அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவா?

ஏனென்றால் 75 வருட ஜனநாயக அரசியல் ஈடுபட்ட தமிழரசி கட்சி இப்படியான ஒரு தவறான முடிவை எடுத்திருக்கின்றது .அது கட்சியை அவமானத்திற்கு உட்படுத்தி இருக்கிறது என்று தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அறிக்கை வெளியிட்டார்.

அப்படியானால் தலைவருக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதா?
தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *