ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உண்மையாக விருப்பம் இருந்தால், செயற்பாட்டாளர்களை ஒடுக்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை அடக்குவதன் மூலம் அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் பெற முடியாது.
சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறும், நிலவும் பிரச்சினைகளை தீர்த்து, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்குமாறும் ஜனாதிபதிக்கு வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலத் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வசதி செய்யுமாறும் தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளதாகவும், அரச தலைவரின் மாதாந்த சம்பளம் ரூபா 250,000 எனவும் இரண்டு வருடங்களுக்கான மொத்த திரட்சி 3 மில்லியன் ரூபா எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே, உண்மையில் காலப்போக்கில் நிதி திரட்டப்பட்டிருந்தால், 17.8 மில்லியன் ரூபாவைக் குவிக்க எவ்வளவு காலம் எடுத்தது என தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் முழு சம்பளமும் மிச்சப்படுத்தப்பட்டாலும் இவ்வளவு தொகையை திரட்ட முடியாது.
இவ்வளவு தொகை, ஜனாதிபதி மாளிகைக்கு எவ்வாறு சென்றது, யார் அந்த நிதியை நன்கொடையாக வழங்கினார்கள் என்றும், அப்படியானால் நோக்கம் என்ன என்றும் தேரர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிறசெய்திகள்