
சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில், அமைச்சுப் பதவிகள் நிபந்தனையாக முன் வைக்கப்படலாகாது என்பதுடன், ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வழங்கினாலும் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா.
கூட்டமைப்பின் தலைவருக்கு இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை வகித்து வரும் நீங்கள், தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றீர்கள். நாடு இப்போது எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடி குறித்து நீங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள்.
சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அமைச்சுப் பதவிகள் நிபந்தனையாக முன் வைக்கப்படலாகாது என்பதுடன், ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வழங்கினாலும் அதனைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நீங்கள் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வீர்களாயின் தமிழர் அபிலாசைகளை கேலிக்குள்ளாக்கி ,மக்கள் இத்தனை நாள் பட்ட துன்பங்களையும் அர்ப்பணிப்புகளையும் கேள்விக்குள்ளாக்கி, உரிமைகளையும் இருப்பையும் நகைப்புக்குள்ளாக்கிவிடும்.
எனவே இத்தகைய பொறுப்பற்ற செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்புள்ள தலைவராக நீங்கள் முன்னெடுக்கமாட்டீர்கள் என நாம் வலுவாக நம்புகின்றோம்.
உங்களுடைய கடைசிக் காலத்தில் தமிழ் மக்களை தலைகுனிய வைக்க மாட்டீர்கள் என்றும் நாம் நம்புகின்றோம். அமைச்சரவையில் அங்கத்துவம் பெறும் எண்ணம் கிஞ்சித்தேனும் உங்கள் மனதில் இருக்குமானால், அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியத்தின் பெயராலும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுச் செறிவாலும் ஒரு தமிழனாக உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இவ்வாறான வேண்டுகோளை முன்வைப்பதற்கான காரணம் யாதெனில், தேசிய அரசியலில் காட்டும் தீவிர அக்கறையை தமிழ்த் தேசிய அரசியலில் காட்டாமல் தமிழ்த் தேசிய அரசியலைப் புறந்தள்ளி ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படுகின்றார்கள் என்பது அவர்களது அண்மைய செயற்பாடுகள் மூலம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு அமைச்சுப் பதவி தேவை என்பதை அறிவித்துவிட்டு கட்சியைவிட்டு வெளியேறி தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
தேசிய சர்வகட்சி வேலைத்திட்டமொன்றினை உருவாக்குவதற்கு சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என ஜனாதிபதிக்கு வாக்குறுதி வழங்கியுள்ளீர்கள். இந்தப் பேச்சுக்களின் பொழுது நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும், அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, காணி அபகரிப்பைத் தடுத்தல், அதிகாரத்தின் பிரயோகிப்பில் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீட்பு, வடக்கு, கிழக்கில் இராணுவக் கெடுபிடிகளை அகற்றுதல். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பவற்றுக்கு விரைவில் தீர்வு காண்பதுடன் 74 வருடங்களாகத் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை தீர்வுக்கான வழிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காணப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு கிடைக்கின்ற கடைசிச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடாதீர்கள் – என்றுள்ளது.