போஹில் தோட்டத்துக்கு செல்லும் பாலம் உடைந்ததால் மக்கள் நிர்க்கதி!

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட
கெட்டபுலா போஹில் கீழ்ப்பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் தோட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கொத்மலை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

போஹில் தோட்ட கீழ்ப்பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இந்தத் தோட்டத்திலிருந்து நாவலப்பிட்டி நகரில் உள்ள பாடசாலைகள், போஹில் த.வி,வெஸ்டோல் த.ம.வி ஆகிய பாடசாலைகளுக்குச் சென்று வருகின்ற 50 மாணவர்கள் உள்ளனர்.

இந்தத் தோட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்ற 100 க்கும் மேல் உள்ளனர். இவர்களின் பிரதான பாதையாக இருந்த சிறிய ரக பாலம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் ஊடான போக்குவரத்தே இவர்களுக்கு வசதியாக இருந்தது.
மாற்றுப் பாதை ஒன்றின் ஊடாக செல்வதென்றால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதை ஒன்றின் ஊடாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயம் குறித்து கொத்மலைப் பிரதேச செயலாளருடன் மத்தியமான சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தொடர்பு கொண்டு கேட்ட போது,நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் உடனடியாக பாலம் ஒன்றை அமைப்பதற்கான நிதி வசதி இல்லை என்றும் மாற்றுப் பாதையை சீர் செய்வதற்கு 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் எனினும் இந்தப் பாதையை சீர் செய்வது தொடர்பில் தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் கொத்மலை பிரதேச செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணுவதற்கு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக சோ. ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *