திடீர் சுகயீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
புத்தளம் மன்னார் வீதியில் உள்ள ரகுமத் நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த முபீத் முஹம்மத் ஷராப் (வயது 9) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்ற குறித்த மாணவன், இன்று வியாழக்கிழமை வழமை போல காலை பாடசாலைக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாடசாலையில் குறித்த மாணவன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த மாணவன் ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், இன்று மாலை அந்த மாணவன் வீட்டில் இருந்த போது மீண்டும் சுகவீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த மாணவனின் தீடீர் மரணம் புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் தலைமையக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறசெய்திகள்