எனக்கு அப்பா தான் முதல் வில்லன்: நடிகர் கார்த்தி

இந்தியா,ஓகஸ்ட் 04

கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் ஓடியோ வெளியீட்டு விழா நேற்று 03/8/2022 நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கார்த்தி, “கிராமத்து படங்கள் எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் சொன்னார்கள். கிராமத்து படங்களை நிறைய எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு முத்தையா சார் மாதிரி ஆட்கள் தான் உந்துதல்.

பருத்தி வீரனுக்குப் பிறகு யாராவது கிராமத்துக் கதை கூறினால் பயம் இருக்கும். கொம்பன் கதை கேட்கும்போது தான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு இந்த கதை கூறினார். எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு அப்பா தான் நாயகனாக இருப்பார்.

ஆனால், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன்.
யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் ஒருவன், அப்பனே தப்பு செய்தாலும் விடமாட்டான் என்று கதை கூறினார். அந்த வரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அப்பா யார் என்று கேட்டால், பிரகாஷ்ராஜ் தவிர வேறு ஆள் கிடையாது. அவரை எதிர்த்து நிற்கும் போது தனி சுகம் இருக்கும். அது அவருக்கும் பிடிக்கும்” என்று கூறினார். ‘விருமன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *