இளைஞர்களுடனும் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றத் தயார் – ஜனாதிபதி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் இளைஞர்களுடனும் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறிய ஜனாதிபதி, அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இளைஞர்களை ஈடுபடுத்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன்போது ஜனநாயகமற்ற அரசியலுக்கும் வன்முறைக்கும் தான் எதிரானவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் மூலம் மட்டும் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் கலந்துரையாடல் மூலம் பொதுவான நிலைப்பாட்டை எட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெண் பிரதிநிதித்துவம் உட்பட அனைத்து மதத்தினரின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்குமாறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *