13வது சட்ட திருத்தம் முழுமையாக அதிகார பரவலாக்கப்பட்டு இருக்கின்றதா? வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கேள்வி

எமது வளங்களை நாங்களே பகிர்வதற்கும், எமது மக்களுக்குரிய அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் உரிய கௌரவமான அரசியல் தீர்வினை வழங்குமாறு கோரி இந்த 100 நாட்கள் செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

100 நாட்கள் செயற்திட்ட முனைவு ஆரம்பிக்கப்பட்டு இன்று 6 ஆவது நாள் போராட்டமானது நாவற்குழியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த 1953 ஆம் ஆண்டிலிருந்து சிறுபாண்மை இனத்தவருக்கும், பெரும்பாண்மை இனத்தவருக்கும் இடையில் இன மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன.

அந்த வகையில் அரை நூற்றாண்டிற்கு மேலாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் மீதான உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களுடைய குரல்கள் கேட்கப்படாமல், அவர்களுடைய முடிவுகளை அவர்களே எடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதன் வெளிப்பாடாக கடந்த பல வருடங்களாக இலங்கை நாடானது பல யுத்தங்களை கண்டிருக்கிறது அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மக்களாகிய நாங்கள் ஒரு கௌரவமான மற்றும் நிரந்தரமான அரசியல் தீர்வினை வலியுறுத்தி இந்த 100 நாட்கள் செயர்த்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

இந்த வேலைத் திட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசியலமைப்பில் 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கான காரணம் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் அதிகார பரவலாக்கம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற உரிமை சட்ட ரீதியான உரிமையினை ஏற்கனவே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த 13 ஆவது சட்ட திருத்தினை முழுமையாக அதிகார பரவலாக்கப்பட்டு இருக்கின்றதா? என்றால் அது கேள்விக் குறியாக உள்ளது.

தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அந்தவகையில் எமது வளங்களை நாங்களே பகிர்வதற்கும், எமது மக்களுக்குரிய அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் உரிய கௌரவமான அரசியல் தீர்வினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *