புத்தளத்தில் மாவட்டத்தில் மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தினச் சந்தைகளில் அதிக விலைகளுக்கு மீன்களும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் கடும் காற்று மற்றும் மண்ணண்ணெய் இல்லாமை போன்ற காரணங்களால் புத்தளம் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே இவ்வாறு மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு மீன்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துள்ள போக்குவரத்து செலவு என்பனவற்றினால் கடந்த வாரத்தை விடவும் இந்த வாரம் மீன்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

இதன்படி மட்டுப்படுத்தப்பட்ட மீன்களே சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் நிலையில், அவை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் எனினும் அதுவும் தமக்கு நஷ்டத்தையே கொடுப்பதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புத்தளம் நகர மீன் சந்தையில் இன்றைய தினம் பாரை மீன் ஒரு கிலோ கிராம் 2400 ரூபாவுக்கும் , கெலவர மீன் 2650 ரூபாவுக்கும், செமன் போல் மீன் 1400 ரூபாவுக்கும், மட்ட சூடை மீன் 1250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பெரிய இறால் ஒரு கிலோ 1900 மற்றும் சிறய அளவிலான இறால் ஒரு கிலோ 1500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை கடந்த வாரத்தை விடவும் இரண்டு மடங்கு விலை அதிகரிப்பு என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்