கடனும் கப்பலும் – நிலாந்தன்.

யுவான் வாங் – 5 என்ற பெயருடைய சீனக் கப்பல் வரும் 11ம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. கப்பல் கிட்டதட்ட ஒரு வார காலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும். இது ஏற்கனவே கோட்டாவின் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிகழும் விஜயம். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுக்கூடாகப் பார்த்தால் அது இயல்பான ஒன்று. முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தில் இருந்து இப்போது இருக்கும் அரசாங்கம் பின்வாங்குவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இப்படி ஒரு கப்பல் வரப்போகிறது என்பது இந்தியாவுக்கும் ஏற்கனவே தெரியும். ஆனால் இந்தியா அந்த கப்பலின் வருகை தொடர்பாக அதிகம் கரிசனைகளை வெளிக்காட்டி வருகிறது. அதற்கு காரணம் என்ன?

அது ஒரு ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல் என்று கூறப்படுகிறது.எனினும் அந்தக் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் உயர் தொழில்நுட்பக் கருவிகளின்மூலம் அந்த கடற் பிராந்தியத்திலும் அதிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையிலுமான கடற் பிராந்தியத்திலும் காணப்படும் நீர் மூழ்கி வழித்தடங்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் அந்த கப்பலுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.அதுதான் இந்தியாவினுடைய கரிசனையாகவும் இருக்கலாம். ஏற்கனவே 2015 ஆட்சி மாற்றத்துக்கு முன்பு 2014இல் கொழும்புத் துறைமுகத்திற்கு ஒரு சீன நீர்மூழ்கி கப்பல் வந்து நின்றது.அதுவும் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது. தங்களுடைய ஆட்சியை மாற்றியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்று ராஜபக்சக்கள் வெளிப்படையாகவே நேர்காணல்களில் கூறியிருக்கிறார்கள்.எனவே தொகுத்துப்பார்த்தால் இந்தியா இந்தக் கப்பலின் வருகையை எப்படித் தடுக்கலாம் என்றே சிந்திக்கும்.அவ்வாறு சிந்திப்பதற்குத் தேவையான, சாதகமான ஒரு ராஜ்யசூழல் கடந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இலங்கைத் தீவு அதன் கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத ஒரு நிலைமை தோன்றிய பொழுது, முதலில் உதவியது இந்தியாதான். கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி இந்தியா இதுவரையிலும் சுமாராக நான்கு பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக கொடுத்திருக்கிறது. இந்தியாவின் கடன் உதவியின் கீழ் எரிபொருள் கிடைத்திருக்காவிட்டால் ரணில் விக்கிரமசிங்க மின்வெட்டு நேரத்தை குறைத்திருக்க முடியாது. அது போலவே செயற்கை உரம் கிடைத்திருக்காவிட்டால் அதை விவசாயிகளுக்கு கொடுத்திருக்க முடியாது. இப்படிப் பார்த்தால் கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கைத் தீவு கோமா நிலைக்கு செல்வதை தடுக்கும் விதத்தில் சிறுகச் சிறுக சேலைன் ஏற்றியதில் இந்தியாவின் பங்கு பெரியது. கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையில் அதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்தியாவின் உதவியானது உயிர் மூச்சை போன்றது என்று அவர் கூறுகிறார்.

இவ்வாறு இந்தியா கடந்த ஆறு மாத கால பகுதிக்குள் இலங்கைத் தீவை பெருமளவுக்கு தன்னில் தங்கியிருக்க செய்துவிட்டது. இந்தத் தங்கு நிலையைப் பயன்படுத்தி இந்தியா 6 உடன்படிக்கைகளையும் செய்திருக்கிறது. இந்த ஆறு உடன்படிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று மன்னாரிலும் தீவுப் பகுதிகளிலும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை நிறுவுவது. இரண்டாவது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் உடன்படிக்கை.கடலில் ஏற்படும் விபத்துகளின் போது கப்பல்களைக் காப்பாற்றுவதற்கான கண்காணிப்பு வலைப்பின்னல் ஒன்று இதன் மூலம் உருவாக்கப்படும். இந்த இரண்டு உடன்படிக்கைகள் மூலமும் இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை ஒப்பீட்டளவில் பலப்படுத்திக் கொண்டு விட்டது. மேலும் திருகோணமலையில் உள்ள ஒரு பகுதி எண்ணெய்க் குதங்களின் மீதான கட்டுப்பாட்டையும் இந்தியா உறுதிப்படுத்திக் கொண்டது

இவைதவிர தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்ட பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது,காங்கேசன் துறையிலிருந்தும் மன்னாரிலிருந்தும் தமிழகத்துக்கு கப்பல் விடுவது, யாழ் நகரப் பகுதியில் இந்தியா கட்டிக் கொடுத்த கலாச்சார மண்டபத்தை விமரிசையாக திறப்பது…போன்ற விடயங்களில் இந்தியா முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் தொகுத்துப் பார்த்தால்,கடந்த ஆறு மாத காலப் பகுதி என்பது, குறிப்பாக கோட்டா இந்தியாவை நோக்கித் திரும்பிய காலகட்டம் என்பது, இந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் அனுகூலமான ஒரு காலப்பகுதி எனலாம். இவ்வாறு இந்தியாவில் இலங்கை தங்கியிருக்கும் ஒரு காலப்பகுதியில் சீனக் கப்பல் வருவதை தடுப்பதற்கு தேவையான பேர பலம் தன்னிடம் உண்டு என்று இந்தியா கருதக்கூடும்.

ஆனால் மறுவளமாக, சீனாவைப் பொருத்தவரையிலும் அது இலங்கைத் தீவில் ஏற்கனவே நிலை கொண்டு விட்டது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்றுவதனால் குறைந்தது 90 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். திறந்த சந்தைப் பொருளாதாரத்தின்கீழ் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையின்மூலம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. அப்படித்தான் துறைமுகப் பட்டினமும். அங்கிருந்தும் சீனாவை வழமையான வர்த்தக நடவடிக்கைகளின்மூலம் அகற்ற முடியாது. வழமைக்கு மாறான போர் நடவடிக்கைகளின் மூலம்தான் சீனாவை இச்சிறிய தீவில் இருந்து அகற்றலாம்.

கடந்த ஆறுமாதகாலப் பகுதிக்குள் சீனா இலங்கைக்கு பெரிய அளவில் உதவிகளை செய்யவில்லை.ஒருவிதத்தில் விலகி நின்று அவதானித்துக் கொண்டிருக்கும் நாடு என்று சொல்லலாம். இந்தியா அவசர அவசரமாக இலங்கைக்கு உதவிகளை வழங்கிய பொழுது சீனா அமைதியாக பதட்டப்படாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அப்படித்தான் மேற்கு நாடுகள் மற்றும் மேற்கு நாடுகளின் நிதிமுகவர் அமைப்பாகிய அனைத்துலக நாணய நிதியம் போன்றன இலங்கைத் தீவுக்குள் இறங்கக்கூடிய நிலைமைகள் தோன்றியபொழுதும் சீனா நடப்பு நிலவரங்களை பதட்டமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தது.ஏனென்றால் இலங்கைத் தீவில் ஏற்கனவே பலமாகக் காலூன்றியிருக்கும் சீனாவை வழமையான வணிக நடவடிக்கைகளின்மூலம் அகற்ற முடியாது.

அது மட்டுமல்ல, இப்பொழுது அனைத்துலக நாணய நிதியம் சீனாவிடம் வாங்கிய கடனை மீள கட்டமைக்குமாறு இலங்கையிடம் கேட்கிறது. சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகள் ஐ.எம்.எஃப்.பிடம் உதவி கேட்கும்போது, ஐ.எம். எப்.அப்படிப்பட்ட நிபந்தனைகளை இதற்கு முன்னரும் விதித்திருக்கிறது. ஆபிரிக்க நாடாகிய சம்பியா அதற்கு ஆகப்பிந்திய உதாரணம் ஆகும்.சாம்பியாவும் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கிய ஒரு நாடு. அங்கேயும் சீனா அதிகளவு உட்கட்டுமான முதலீடுகளை செய்தது. கோவிட்-19 சூழலுக்குள் சாம்பியாவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து நாடு கடனைத் திரும்பக் கொடுக்க முடியாத வங்குரோத்து நிலையை அடைந்தது.பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னம் இருந்த அரசாங்கம் அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கையோடு ஐ.எம்.எப்போடு உரையாடலை தொடங்கியது. ஐ எம் எப். அங்கேயும் சீனாவின் கடனை மீளக் கட்டமைக்கக் கேட்டது. கடந்த மாத இறுதியில் சீனா அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கடனை மீள கட்டமைத்தல் என்பதை பின்வருமாறு எளிமையாக விளங்கிக் கொள்ளலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.முதலாவதாக கடனின் ஒரு பகுதியை தன்னால் மீளச்செலுத்த முடியாது என்பதனை குறிப்பிட்ட நாட்டுக்கு தெரிவிப்பது.அதாவது வங்குரோத்து நிலையை ஏற்றுக் கொள்வது.இரண்டாவதாக,இரண்டு நாடுகளும் கலந்துபேசி கடனை மீளச் செலுத்தும் கால எல்லையை மாற்றி அமைப்பது.மூன்றாவதாக கடனுக்குரிய வட்டி விகிதத்தை குறைக்குமாறு கேட்பது.சாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் விடயத்தில் கடனை மீளக்கட்டமைக்க சீனா தயாராக காணப்படுகிறது.ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையிலும் நிலைமை அவ்வாறு இல்லை என்று கருதப்படுகிறது. அதற்குக் காரணம் இலங்கைத் தீவின் பிராந்திய யதார்த்தம்தான். அதாவது இலங்கைத்தீவு, இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துள் அமைந்திருக்கிறது. எனவே சீனாவின் கடன் என்பது இங்கே ஓர் அரசியல் ராஜதந்திர முதலீடுதான்.

நேற்று கம்பூச்சியாவில் ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை தீவின் வெளிவகார அமைச்சர் சீன வெளிவிவகார அமைச்சரோடு உரையாடியிருக்கிறார்.இந்த உரையாடலின்போது சீனா, கப்பலின் வருகையை மீள உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படியான ஒரு விஜயம் என்ற போதிலும், இந்த விவகாரத்தை இலங்கைத்தீவின் ஆகப்பிந்திய களநிலவரத்துக்குள் இச்சிறிய தீவின் மீதான தனது பிடி எந்தளவுக்குப் பலமாக உள்ளது என்பதனை பரிசோதிப்பதற்கான ஒரு தருணமாக சீனா பயன்படுத்துகிறது.

அதாவது இலங்கைத் தீவானது, சீனா, இந்தியா, ஐஎம்எப் ஆகிய முத்தரப்புக்கும் இடையே சிக்குண்டிருக்கிறது. கடனை அடைப்பதற்கும் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கும் மூன்று தரப்புகளிலும் ஏதோ ஒரு விதத்தில் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலை.குறிப்பாக இந்தியாவின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு சீனாவை நெருங்கி செல்ல முடியாது.அதே சமயம் சீனாவைப் பகை நிலைக்கு தள்ளிவிட்டு கடனை அடைக்கவும் முடியாது. எனவே மூன்று பேரரசுகளுக்கும் இடையிலான முத்தரப்பு இழுவிசைகளுக்குள் ரணில் விக்கிரமசிங்க சிக்குண்டிருக்கிறார்.அவர் ஆட்சிப் பொறுப்பையேற்ற கையோடு அவருக்கு வந்திருக்கும் முதலாவது ராஜதந்திர நெருக்கடி இது. இந்த நெருக்கடியை அவர் எப்படி எதிர்கொள்வார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *