பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் திங்கட்கிழமைக்குள் முன்மொழிவுகள் அறிவிக்கப்படும் – ஜனாதிபதி

சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் தொகுக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை அனைவருக்கும் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில தமிழ் கட்சிகள் உட்பட சில அரசியல் கட்சிகளுடனான் பேச்சுவார்த்தை மீதமுள்ள நிலையில் அவர்களும் அரசியல் பேதங்களை மறந்து சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது அரசியல் சீர்திருத்தங்களினால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் எதிர்கால உலகத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

புதிய வடிவில் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழில் வல்லநர்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டை கட்டியெழுப்பும் பொதுவான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றும் அதன் மூலமே படிப்படியாக முன்னேற முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *