சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட கற்பிட்டி தலவில புனித அன்னமாள் பரிசுத்த தலத்தின் 260 ஆவது வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை தலைமையில் புனித அன்னமாள் பரிசுத்த தலத்தின் 260 ஆவது திருநாள் கூட்டுத் திருப்பலி இடம்பெற்றது.
கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான புனித அன்னமாள் பரிசுத்த தலத்தின் 260 ஆவது வருடாந்த திருவிழாவில் தினந்தோறும் மாலை ஆராதனைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்றது.
அத்துடன், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை புனித அன்னமாள் பரிசுத்த தலத்தின் 260 ஆவது திருநாள் கூட்டுத் திருப்பலியை தமிழிலும் சிங்களத்திலும் ஒப்புக் கொடுத்தார்.
அத்தோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்கவும், மக்கள் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை இதன்போது விஷேட பிராத்தனை செய்தார்.
இதனையடுத்து, புனித அன்னமாளின் திருச்சுரூபவப் பவணி வெளி வீதி வலம் வந்தது.
மேற்படி தலவில புனித அன்னம்மாள் பரிசுத்த தலத்தின் திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல இடங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தலவில புனித அன்னம்மாள் பரிசுத்த தலத்திற்கு பக்தர்கள் வருவதற்கும், பின்னர் அங்கிருந்து செல்லவதற்கும் என பாலாவி தொடக்கம் கற்பிட்டி தலவில வரைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பகல் , இரவு நேரங்களில் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கம் ஊடாக புத்தளம் பாலாவிக்கு புகையிரதத்தில் வரும் பக்தர்களுக்காகவே இவ்வாறு இ.போ.ச பஸ்கள் பாலாவி புகையிரத நிலையத்தில் இருந்து சேவைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்