போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும்: தாய்வான் அதிபர்

தைபே,ஓக 07

தாய்வானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே, சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்குச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது.

நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லை அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தைவானின் எல்லைப்பகுதி அருகே சீன ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க வேண்டும் என தைவான் அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிபர் சாய் இங்-வென் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தைவான் அரசும் ராணுவமும் சீனாவின் ராணுவ பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளன. தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவைகேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *