கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் வவுனியா குருமன்காடு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த அவர்கள்,
இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த
பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்றுவரை தொடர்கிறது. இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது.
இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ
ஏற்றுக்கொண்டுள்ளன.
அந்தவகையில் வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு அதிகாரப்பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாக இருப்பதுடன், சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.
ஆகவே எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் நட்புநாடான இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொண்டு வடகிழக்கு வாழ் மக்களான நாம் எமது சாத்வீகமான ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவை ஆரம்பித்திருக்கின்றோம். என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாம் நாட்டை துண்டாடவில்லை கௌரவமான தீர்வையே கேட்கிறோம், செவிடராய் குடுரடாய் ஊமையாய் ஒரு வாழ்வு இனியும் தொடராது போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.




பிற செய்திகள்