
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் அக்கிராசன உரையாற்றிக்கொண்டிருக்கும்அதேநேரம் இந்த நாட்டிலே உள்ள இராணுவம் அவருக்கு கீழே இல்லையா என்பதை பறைசாற்றும் விதமாக இராணுவத்தின் அடாவடிகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகரித்திருக்கின்றது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உள்ள கண்ணகிநகர் மற்றும் புன்னைநீராவியில் உள்ள பாற்கடற்கும்பான் முன்பள்ளியின் பெயர் கடந்த 3ம் திகதியும் அதேபிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் உள்ள மயுரன் முன்பள்ளியின் பெயர் இராணுவத்தின் தலையீட்டின் மூலம் வீரமுத்துக்கள் முன்பள்ளி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளமை கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையின் சுயாதீன நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மீள்குடியேற்றம் நடைபெற்றபோது இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அங்கு கற்பித்த ஆசிரியர்களும் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
கிளிநொச்சி 303 பேர் முல்லைத்தீவில்366 பேர் யாழ் மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடமாகாணத்தை சேர்ந்த 481 முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவ படையணியின் சம்பளத்தை பெற்று கடமையாற்றும் சுழல் வலிந்து உருவாக்கப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சம்பளத்தை மாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கி முன்பள்ளிகளின் கல்வித் தரத்தைமேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல தடவைகள் எங்களால் வலியுறுத்தப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த முன்பள்ளிகளுக்கு இராணுவ இலட்சினைகளுடன் பெயர் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளதுடன் இந்த முன்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இராணுவத்தின் சிவில் பிரிவின் பெயர் பொறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் 481 பேர் முன்பள்ளி ஆசிரியர்கள் படையினரின் சிவில் படைப்பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு படையினராலேயே வேதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஆரம்பக்கல்வியை இராணுவ மயப்படுத்தப்படுவது இலங்கையில் இன ஒடுக்குமுறைக்கு ஒரு உதாரணம் என்றும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
எனவே ரணில் விக்கிரமசிங்க, நியாயமான ஒருவராக இருந்தால், அவர் இவ்வாறான பிரச்சினைகள் உட்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணவேண்டும்.
இல்லையென்றால் இராணுவத்துக்கு பயந்தே நாட்டில் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.
அத்துடன் அரசாங்கத்துக்கு புறம்பாக நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பிற செய்திகள்