இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை உடனடியாக கொண்டுவர திட்டம்!

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சமூக வலைத்தள செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை துரிதமாக கொண்டு வருமாறும் மேலும் நான்கு சட்டமூலங்களை விரைவாக திருத்துமாறும் பாதுகாப்பு பிரதானிகள் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்த சட்டமூலங்களை திருத்த வேண்டும் என நீதியமைச்சுக்கு தொடர்ந்தும் அறிவித்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், போராட்டகாரர்கள் அரச சொத்துக்களை அழிக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்திய விதத்தை பாதுகாப்பு பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூடியே போதே பாதுகாப்பு பிரதானிகள் இதனை கூறியுள்ளனர்.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு சம்பந்தமான சமூக வலைத்தள கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தை துரிதமாக கொண்டு வருதல், காணி, குடிவரவு, குடியகல்வு, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மதமாற்றம் தொட்ர்பாக சட்டமூலங்களை உடனடியாக திருத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட விடயங்கள் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் பலவீனமான சட்டங்கள் இலங்கையிலேயே இருப்பதால், உடனடியாக இந்த சட்டங்களில் திருத்தங்களை செய்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை நீதியமைச்சு வழங்குவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *