நாளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிவந்தடையவிருந்த யுவான் வாங்-5 கப்பலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் துறைமுகத்துக்கு வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன தூதரகத்துக்கு அறிவித்துள்ளது.
வாய்மொழி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாறு மைத்ரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கான அனுமதி, ஜூன் 28 ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி ஜூலை 12 வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியயையடுத்து, யுவான் வாங் -5 கப்பல் ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியாமல் இந்த கப்பலுக்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 24 நாட்கள் கடலில் பயணித்த இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைய 3 நாட்கள் இருக்கும் நிலையிலேயே, வரும் திகதியை தாமதப்படுத்துமாறு கடந்த 8 ஆம் திகதி சீனா தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையை அடைந்த பின்னர், அதிலுள்ள 2000 பேருக்கான உணவு தீர்ந்துவிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலேயே எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பிறகு இலங்கை வருமாறு குறித்த கப்பலுக்கு சீன தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஆகஸ்ட் 12 ஆம்திகதி கொழும்புக்கு வரும் பாகிஸ்தான் போர் கப்பல் தனது முதல் பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை வருகிறது.
இந்தக் கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் சீன கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஒருநாட்டை வைத்து, இன்னொரு நாட்டை கேவலப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த இரு கப்பல்களும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை.
மிகவும் தூரமாக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தொடர்புகள் நான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மீண்டும் சமீபமாகப்பட்டது. ஜீஎஸ்பி+ கிடைத்தது.
மீன் ஏற்றுமதிக்கு வாய்ப்பு அமைந்தது. அனைத்து உலக நாடுகளும் எமது மக்களுக்கு வரவேற்பளிக்கும் வகையில் இலங்கையை மாற்றினேன்.
எனினும், 2019 இன் பின்னர் அந்த தொடர்புகள் இல்லாமல் போனது. இலங்கையில் முதலீடு செய்ய ஜனாதிபதி கோட்டாபய புலம்பெயர் தமிழர்களை அழைத்தார். எனினும், அவர் தடவையேனும் வடக்கிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஒரு ரூபாவேனும் முதலிடப்படவில்லை.
கொவிட் தொற்றால் மரணித்தோரின் உடலங்களை தகனம் செய்தமையினால் ஏற்பட்ட முரண்பாடுகளால் முஸ்லிம் நாடுகளுடன் இருந்துவந்த நல்லுறவு சீர்குலைந்தது. கட்டார் தொண்டுநிறுவனம், மீதான தடை எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீக்கப்பட்டது.
ஏரோஃப்ளொட் விவகாரத்தினால் ரஷ்யாவுடனான தொடர்பிலும் விரிசல் ஏற்பட்டது. நரேந்திர மோடி எனது காலத்தில் மலையக மக்களுக்கு அநேக உதவிகளை வழங்கினார்.
அத்துடன், உரக்கப்பல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால் சீனா உறவும் பாதித்தது.
தற்போது, இலங்கையிலுள்ள முக்கியமான தூதரங்கள் கூட இங்கிருந்து நீங்குவதற்கான ஆபத்து நிலையும் உருவாகியுள்ளது.
எனவே, முறையாக சர்வதேச உறவுகளை பேண வேண்டும். அவ்வாறல்லாவிடின் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது கடினம். முறையான வெளிநாட்டு கொள்கையொன்று அவசியம் என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்றார்.
பிற செய்திகள்