சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு!

17 வயதுக்குக் கீழ்பட்ட ஏழாவது சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்காக இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்காக கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 4 ந் திகதி தொடக்கம் 14 ம் திகதி வரை இலங்கையின் டொரிங்டனில் அமைந்துள்ள ரேஸ்வோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கான மாகாணமட்ட போட்டிகள்  கடந்த 06 ம் திகதி பொலன்னறுவையில்  நடைபெற்றன.

இத்தெரிவுப் போட்டியில் 250 இற்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 

அதன் பின்னர் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யும் போட்டி வெத்தேகம மைதானத்தில் நடைபெற்றது.

இத் தெரிவுப் போட்டியில் 17 வயதுக்குக் கீழ்பட்ட  1200 மாணவர்கள் 9 மாகாணங்களிலிருந்து கலந்து கொண்டனர்.இதில் 35 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட  35 வீரர்களில் கிண்ணியாவைச் சேர்ந்த 3 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண பாடசாலைகளின் உதைப்பந்தாட்ட சம்மேளன இணைப்பாளரும் கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளன தலைவருமான எ.எல்.எம். நபீல் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கும்போது,

கிண்ணியாவிலிருந்து அதிகமான மாணவர்கள் உதைப் பந்தாட்ட தேசியப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இது ஒரு வரலாற்றுப் பெருமையாகும்.

இதனை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்ததுடன், அல் அக்ஸா தேசியப் பாடசாலையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.முபாஸ்,எ.எம். சம்மி ஆகியோரும் மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம்.கே. கிப்னி ஆகிய மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துக்கூறும்போது, இந்த சாப் கேமில் தெற்காசியாவைச் சேர்ந்த 7 நாடுகள் பங்குபற்றுகின்றன.

அவைகளாவன இந்தியா,மாலைதீவு,பாகிஸ்தான்,பங்களதேஷ்,நேபாள்,பூட்டான்,இலங்கை ஆகியனவாகும்.
இப்போட்டிக்கு இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குழு A இல் இந்தியா,பங்களாதேஷ்,பாகிஸ்தான்,மாலைதீவுஆகிய நாடுகளும் குழு  B இல் இலங்கையும் நேபாளும் பூட்டானும் உள்ளடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *