
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டையின் விலை உயர் வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஜெயவர்த்தன தெரிவித்ததாவது,
இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின் விற்பனை விலை சுமார் 18 ரூபாவாக உள்ளது.இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்து ஒரு முட்டையை 20 ரூபாவுக்கு வழங்குவது மிகவும் எளிதானது.
தற்போது இங்கு ஒரு முட்டையின் விலை 58, 60, 65 ரூபாவாக உள்ளது. இதனை நியாய விலையில் விற்காமல் விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலையில் விற்கின்றனர்.
கோழி தீவனம் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் இந்த விலை அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் சுரண்டப்படுகின்றனர்-என்றார்.