முல்லைத்தீவு பிரதேசத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்! 

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் கிராமங்களில் வாழும் மக்கள் அடிப்படை வசதியற்ற நிலையில் பெறும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – துணுக்காய் செயலாளர் பிரிவிற்கு உட்பட்டதும் கிளிநொச்சி – அக்கராயன் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியிலும் காணப்படும் ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் மேற்படி கிராமத்தில் இரண்டு பொதுக் கிணறுகள் மாத்திரமே குடிநீர் பெறுவதற்கு பயன்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

கிராமத்திலுள்ள ஒரு கிணறு தற்போதைய வரட்சி காரணமாக நீரின்றி காணப்படுகிறது. மற்றைய கிணற்றிலிருந்து நாளாந்தம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை மாத்திரமே பெறக்கூடியதாக உள்ளது.

இதனால், இப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது சில வேளைகளில் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று குடிநீர் பெற வேண்டியுள்ளது.

இதனை விட போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் எமது கிராமத்தில் இருந்து சமுர்த்தி கொடுப்பனவோ மற்றும் பிரதேச செயலக தேவைகளுக்காக செல்வதாக இருந்தால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

அதாவது தங்களது கிராமத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்று கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரை சென்று அதன் பின்னர் துணுக்காய் செல்ல வேண்டும் இவ்வாறு மூன்று பேருந்துகளில் பயணித்து தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது”

இவ்வாறு தமது கிராமத்தில் குடிநீரின்மை, போக்குவரத்து வசதிகளின்மை, காட்டு யானைகளின் தொல்லை என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழ்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *