ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் புத்துணர்வூட்டும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேவேளை கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக செயற்படும். எதிர்வரும் காலங்களில் இடம் பெறும் எத்தேர்தல்களிலும் போட்டியிட தயாராகவுள்ளோம். என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதா நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம். எக்காரணிகளுக்காகவும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து முன்னேறி செல்வோம்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.சர்வக்கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக செயற்படும்.
பொருளாதார நெருக்கடி திட்டமிட்ட வகையில் அரசியல் நெருக்கடியினை தோற்றுவித்தது.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு தற்போது சர்வக்கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள்.அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் இனிவரும் நாட்களில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தயாராகவுள்ளோம்.மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
பிற செய்திகள்