
மன்னார் நகரசபைக்கு சொந்தமான பேரூந்து நிலையத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவையையும் மாதாந்த வாடகையையும் மன்னார் அரச போக்குவரத்து சேவையினர் உரிய முறையில் செலுத்தாமையினால் மன்னார் நகரசபைக்கு பல லட்சம் ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டு வருகின்றது.
மேற்படி மன்னார் நகரசபையால் நிர்வகிக்கப்படும் மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேரூந்துகளும் சேவையை வழங்கி வருகின்றனர் இந்த நிலையில் மன்னார் நகரசபையினால் பேரூந்து தரிப்பிட கட்டணம் மற்றும் சிற்றூழியர்கள் காவலாளிக்கான செலவில் பங்களிப்பை செலுத்தும் வகையில் தனியார் போக்குவரத்து சேவை மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்கு மாதந்த வாடகையாக 50000 ரூபா செலுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பேரூந்து சேவையினர் இரண்டு வருடங்களாக உரிய காலப்பகுதியில் நகரசபைக்கு வாடகை கட்டணத்தை செலுத்தி வருகின்ற நிலையில் அரச பேரூந்து சேவையினர் மாத்திரம் இரண்டு வருடங்களாக எந்த ஒரு கட்டணமும் செலுத்தவில்லை என்பதுடன் முன்னைய நாட்களில் செலுத்த வேண்டிய பணத்தையும் செலுத்தவில்லை.
குறித்த கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக பலமுறை மன்னார் பேரூந்து சாலைக்கு கடிதங்கள் நகரசபையால் அனுப்பப்பட்ட போதிலும் கட்டண நிர்ணயத்தை மீள்பரிசீலிப்பது தொடர்பாக கலந்துரையாடலுக்கு மன்னார் அரச போக்குவரத்து சபையை அழைத்தும் அவர்கள் அழைப்பையும் கட்டணம் செலுத்துவதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மன்னார் நகரசபை அமர்வில் உரிய வாடகை பணத்தை செலுத்த மன்னார் அரச பேரூந்து சேவையினர் தவறினால் நகரசபை பேரூந்து நிலையத்தில் அவர்கள் சேவையை தொடர்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அனைத்து போக்குவரத்து இடையூறுகளுக்கும் மன்னார் அரச போக்குவரத்து சேவையினரே பொறுப்பு ஏற்க வேண்டும் என மன்னார் நகர சபையினர் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்